கம்பெனி ஸ்கேன் - தல்வால்காஸ் பெட்டா வேல்யூ ஃபிட்னஸ் லிட்!

உடல்நலத்துக்கு உறுதுணையாக இருக்கும் சர்வீஸை வழங்கும் ஒரு நிறுவனத்தைத்தான் இந்த வாரம் நாம் அலசப்போகிறோம். அதன் பெயர் தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ ஃபிட்னஸ் லிமிடெட்.

தொழில் எப்படி?
உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்பு என்பது மிகப் பெரும் வியாபாரமாக இந்தியாவில் உருவெடுத்து வருகிறது. நம்முடைய உணவு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாறுதல்களே இந்த சர்வீஸ்களின் தேவையை வேகமாக வளர்த்து வருகிறது. இந்த சர்வீஸ்களின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமே தவிர, குறைவதற்கு வாய்ப்பு இல்லை.  
மேலும், பொருளாதார ரீதியான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் வசதிவாய்ப்புகளால் உடலைப் பேணி காக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அதிகரிப்பும் இந்தத் துறைக்கு நல்லதொரு வளர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
மொத்த உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்பு வியாபாரத்தின் சந்தை மதிப்பில், ஏறக்குறைய 50 சதவிகித  உடற்பயிற்சிக்கான சந்தை வாய்ப்பு என்கிறது ஆய்வுகள். உடற்பயிற்சி சேவைக்கான தேவை வருடாந்திர அளவில் 20% வளர்ந்து வருகிறது. மத்திய மற்றும் உயர்மத்திய தர வாழ்க்கைத்தரம் உள்ள மக்கள் தொகை அதிகரிப்பாலும், இந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதும் உடற்பயிற்சி சேவையின் தேவை அதிகரிப்புக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது.
கம்பெனி எப்படி?
1932-ல் விஷ்ணு தல்வால்கர்ஸ் என்பவர் முதல்முதலாக ஆரம்பித்த ஜிம்மே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதற்கான அடிப்படை. அதன்பின்னர் 1962-ல் அவருடைய மகன் மதுக்கர் தல்வால்கர் ஜிம் ஒன்றைத் துவங்கினார். அதன்பிறகு தல்வால்கர் பிராண்டை அயராது வளர்த்துவருகிறார்.  
2003-ல் தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ ஃபிட்னஸ் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமாக 75 நகரங் களில் 145 கிளைகளுடனும் ஏறக்குறைய 1.5 லட்சம் உறுப்பினர்களுடனும் வெற்றிகரமாக ஜிம்களை நடத்தி வருகிறது இந்த  நிறுவனம்.
பெரியதொரு நெட்வொர்க் ஜிம்மை நடத்தி வெற்றிபெற்றதோடு நின்றுவிடாமல், புதிய முயற்சியாக எலெக்ட்ரோ மசில் ஸ்டிமுலேஷன் (நியூபார்ம்) முறையையும், இளைஞர்களைக் கவரும் அதிநவீன உத்தியாகிய ஃபிட்னஸ் வகுப்புக்குச் செல்லாமல் பார்ட்டிகளுக்குச் செல்வதைப்போல் சென்று ஃபிட்டாக இருப்பதற்கான சேவையையும் (ஜீம்பா ஃபிட்னஸ்) வழங்குவதன் மூலம் போட்டியாளர்களைத் தாண்டி வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது இந்த நிறுவனம்.
போட்டி எப்படி?
ஏற்கெனவே சொன்னதைப்போல் பல்வேறு நூதன உத்திகளைக் கடைப்பிடிப்பதாலும், ஒரு கார்ப்பரேட் ஜிம்மாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்களிருந்து அவர்களுடையப் பணியாளர் களுக்கான சந்தாவைப் பெறுவதிலும் இந்த நிறுவனம் முன்னணி வகிக்கிறது.
எண்ணிக்கையில் பல கிளைகளைக் கொண்டிருப்பதால் பயிற்சிக்கான கருவிகளை வாங்குவதில் கணிசமான தொரு விலை தள்ளுபடியைப் பெற முடிகிறது இந்த நிறுவனத்தால். உள்ளூர் ஜிம்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்துக் கடுமையான போட்டியைத் தரவும் வாய்ப்புள்ளது என்றாலும், தல்வால்கர்ஸ் ஒரு ஸ்ட்ராங்கான பிராண்டாக இருப்பதால், கொஞ்சம் அதிகமான கட்டணம் இருந்தால்கூட வாடிக்கையாளர்களைப் பெறுவதில் பெரிய இடைஞ்சல்கள் ஏதும் இதுவரையில் இல்லை.  
சொந்தமாகக் கிளைகளை நிறுவுவது மற்றும் பிரான்சைஸ் (ஹை-ஃபை மாடல்) மூலமாகக் கிளைகள் நிறுவுவது என்ற இரண்டு முறைகளிலும் செயல்பட்டு போட்டி நிறுவனங்களை வெற்றிகரமாகச் சமாளித்துவருகிறது இந்த நிறுவனம்.

மேனேஜ்மென்ட் எப்படி?
ஃபிட்னஸ் தொழில் நிறையச் செயல்பாட்டுச் சிக்கல்கள் மற்றும் போட்டிகள் இருக்கும் தொழில் என்றாலும், தல்வால்கர்ஸ் மேனேஜ்மென்டிடம் இருக்கும் நீண்டகால அனுபவமே இந்த நிறுவனத்தை ஒரு சிறப்பான நிறுவனமாகச் செயல்படவைக்கிறது.
கம்பெனியின் தலைவராகிய  மதுக்கர் தல்வால்கருக்கு இந்தத் துறையில் 50 வருட அனுபவமும்,  இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகிய  பிரசாந்த் தல்வால்கருக்கு 25 வருட அனுபவமும் உண்டு.

ரிஸ்க் உண்டா?
இந்தத் தொழிலுக்கான தேவை கணிசமான அளவில் வளர்ந்து வருகிறது. எனவே, தேவைக் குறைபாடு ஏற்படலாம் என்பது குறித்த ரிஸ்க் குறைவு. அதேபோல் கணிசமான லாப விகிதத்தையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.50 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை புரமோட்டர்களே வைத்திருப்பதும், அந்தப் பங்குகளுக்கு ஈடாகக் கடன் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.
வேகமான விரிவாக்கங்கள் செய்யப்படும்போது நிறைய பணம் தேவைப்படலாம். பல புதிய பிரீமியம் சர்வீஸ்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.இந்த பிரீமியம் சர்வீஸ்கள் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுபடாமல் போனால் லாபம் குறைய வாய்ப்புள்ளது.
இறுதியாக, இது ஒரு ஸ்மால் கேப் பங்கு. ஸ்மால் கேப்புக்கே உள்ள பல ரிஸ்க்குகள் இந்தப் பங்குக்கும் உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

  என்ன செய்யலாம்?
அளவான எக்ஸர்சைஸ் உடலுக்கு நல்லது என்பதுபோல், இந்த ஸ்மால் கேப் பங்கிலும் அளவாக முதலீடு செய்வது நல்லது. சந்தை வேகமான சரிவைச் சந்திக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்கை வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - ஹிந்துஸ்தான் ஜிங்க்!

பொருளாதாரச் சக்கரம் மேல்நோக்கி போகும்போது நல்ல லாபத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.இந்த வாரம் கம்பெனி ஸ்கேனிங் பகுதியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் என்னும் கம்பெனியைப் பார்க்கப் போகிறோம்.

தொழில் எப்படி?
ஜிங்க் (துத்தநாகம்) எனும் நான்-ஃபெரஸ் மெட்டல் முலாம் பூசுவதற்குப் பயன்படும் ஓர் உலோகமாகும். முன்பெல்லாம் வீட்டிலிருக்கும் பாத்திரங்களுக்கு ஈயம்  (லெட்) பூசிப் பார்த்திருப்பீர்கள். தொழில்ரீதியான தொழிற்சாலைகளில் மெஷின்களில் பயன்படுத்தப்படும் இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க ஜிங்க் முலாம் பூசப்படுகிறது. தகடுகள், ட்யூப்கள், வயர்கள் எனப் பல்வேறு இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இந்த முலாம் பூசப்பட்டே பயன்படுத்தப்படுகிறது.
உலகத்தில் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜிங்க் உலோகத்தில் கிட்டத்தட்ட 50%  அளவு இந்த முலாம் பூசுதலுக்கே பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கு ஏற்றாற்போல் புதிய நகரங்களும், துணை நகரங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படும்போது இந்தத் துத்தநாக முலாம் பூசப்பட்ட தகடுகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்துவந்தது. எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளில் தேவை குறையுமென்றாலும் ப்ரிக் போன்ற வேகமாகப் பொருளாதார ரீதியாக வளர வாய்ப்பிருக்கும் நாடுகளில் இந்தத் தகடுகளின் தேவை அதிகரிக்கவே செய்யும். எனவே, ஜிங்க்-ன் தேவை தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். 2012-க்கு முன்னால் வரை ஜிங்க் உற்பத்தித் தேவையைவிட சற்று அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், அதிகரித்துவரும் சுரங்கங் களின் ஆழம், முதலீட்டாளர்களின் அதிக லாப எதிர்பார்ப்பு, செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பல விஷயங்களால் உற்பத்தி சற்றே குறைந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் மீண்டும் சீராகும்போது ஜிங்குக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
பொதுவாகவே ஜிங்க்கின் தாதுக்களுடன்தான் மற்றொரு நான்-ஃபெரஸ் மெட்டலான  லெட்-ன் (காரியம்) தாதுப் பொருட்களும் கிடைக்கிறது. பேட்டரிகளில் லெட்-ன் உபயோகம் மிக மிக அதிகம். ஏறக்குறைய  உலகத்தில் தயாரிக்கப்படும் லெட்-ல் பாதி அளவு பேட்டரிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, லெட்டுக்கான தேவையும் தொடர்ந்து சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி எப்படி?
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ராம்பூரா அகுச்சா, ராஜ்பூரா தாரிபா, ஜாவர் மற்றும் சிந்தேசர் குர்ட் போன்ற இடங்களில் ஜிங்க் மற்றும் லெட் தாதுப்பொருட்களுக்கான சுரங்கங்கள் இருக்கின்றது. இதில் ராம்பூரா-அகுச்சாவில் இருக்கும் சுரங்கமே உலக அளவில் மிகப் பெரியதும், உலக அளவில் மிகக் குறைந்த செலவு உள்ளதும் ஆகும்.  மிகவும் உயரிய வகை தாதுப் பொருளை இந்தச் சுரங்கம் கொண்டுள்ளதுதான் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்குப் பெரிய அனுகூலமாகும்.
2014-ம் ஆண்டிலும் ராம்பூரா- அகுச்சாவிலும், கயாட் சுரங்கத்திலும் புதிய சுரங்கங்கள் தாதுப்பொருளை வெளிக்கொணரத் துவங்கும். சுரங்கங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட 450 கி.மீட்டர் தூரத்தினுள்ளேயே இருப்பதால், உற்பத்திக்காக செய்யப்படும் தாதுப்பொருட்களின் போக்குவரத்து செலவும் குறைகிறது. தரமான தாதுப்பொருள் சுரங்கங்களைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டுள்ளதும் இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பு.
ஹிந்துஸ்தான் ஜிங்க் தன்னுடைய உற்பத்திக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் தானே உற்பத்தி செய்யும் அளவுக்கு  தன்னிறைவு பெற்றுள்ளதால் இதிலும் செலவுக் குறைப்பைக் கடைப்பிடிக்கிறது. ஜிங்க்-ன் தாதுப்பொருளில் வெள்ளியும் இருக்கும்.  சிந்தேசர் குர்ட் சுரங்கத்தில் கிடைக்கும் ஜிங்க்-ன் தாதுப்பொருளில் அதிக அளவிலான வெள்ளி இருக்கிறது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துகொண்டு வருவதால், இதிலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் கணிசமான லாபம் பார்க்க முடியும் என்றே எதிர்பார்க்கலாம்.
சுரங்கம் சார்ந்த மேனுபேக்ஸரிங் தொழில்கள் அதிக அளவில் முதலீடு தேவைப்படும் தொழில்கள்.  கடைசியாக செய்யப்பட்ட விரிவாக்கங்களுக்குப் பின்னால்  எதிர்காலத்தில் (குறுகியகால அளவில்) வேறு பெரிய விரிவாக்கத் திட்டங்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் கொண்டிருக்கவில்லை. எனவே, பொருளாதார நிலை சீரடைந்து ஜிங்க், லெட் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரிக்கும்போது நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்துக்கு உண்டு.

ரிஸ்க் ஏதும் உண்டா?
ஹிந்துஸ்தான் ஜிங்க் உற்பத்தி செய்யும் பொருட்களான ஜிங்க், லெட் மற்றும் வெள்ளியின் விலை என்பது லண்டன் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலைகளில் ஏதாவது தாறுமாறான போக்கு வந்தால் லாபம் பாதிக்கப்படலாம்.  அதேபோல், ஏற்றுமதியும் பெருமளவில் இருப்பதால், டாலரின் சந்தை மதிப்பு மாற்றத்துக்கு ஏற்றாற்போல் லாபமும் மாற வாய்ப்புள்ளது.  
சுரங்கம் என்றாலே அது அரசாங்க மற்றும் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, அரசாங்கத்துக்கு தரவேண்டிய ராயல்டி மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப மாறவே செய்யும். சுரங்கத் தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய லாபத்தில் கணிசமான தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நிலைமையும் நடப்பில் வந்துவிடும்போது லாபம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

 மேனேஜ்மென்ட் எப்படி?
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் ஏறக்குறைய 65 சதவிகிதமும், இந்திய அரசு ஏறக்குறைய 30 சதவிகிதமும், பொதுமக்கள் மீதமுள்ள 5 சதவிகிதத்தையும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் வைத்துள்ளனர். தற்போது அரசாங்கம் அதன் பங்குகளை விற்பதற்கு அட்டர்னி ஜெனரல் அனுமதியளித்துள்ளது இந்த பங்கின் விலை உயர்வதற்கான வாய்ப்பாகும். சுரங்கம் மற்றும் மேனுபேக்ஸரிங் துறையில் கணிசமான அளவு அனுபவமும் நிரூபிக்கப்பட்ட செயல்திறனும் கொண்ட அதிகாரிகள் இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்துவருகிறார்கள்.

ஏன் முதலீடு செய்யவேண்டும்?
உலகப் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருக்கும்போது ஒரு மெட்டல் கம்பெனியில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றவே செய்யும். ஜிங்க் மற்றும் லெட் தயாரிப்பில் உலக அளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஹிந்துஸ்தான் ஜிங்க் செயல்பட்டுவருகிறது. ஜிங்க் மற்றும் லெட் தயாரிப்பில் சல்ப்யூரிக் ஆசிட் மற்றும் சில்வர் என்பது உபபொருட்களாக வருகிறது. இவற்றின் தேவையும், ஜிங்க் மற்றும் லெட்டின் தேவையும் உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை மாற ஆரம்பிக்கும்போது அதிகரிக்கவே செய்யும்.
பெரிய கடன் இல்லாமலும், விரிவாக்கத் திட்டங்கள் பல முடிவடைந்த நிலையிலும் இருக்கும் இந்த நிறுவனம் பொருளாதாரச் சக்கரம் மேல்நோக்கி போகும்போது நல்ல லாபத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த  நிறுவனத்தின் பங்குகளை ஃபாலோ செய்து, சந்தை நன்றாக இறங்கும்போது வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பது குறித்து முதலீட்டாளர்கள் பரிசீலனைச் செய்யலாம்.
 - நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட்!

நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை....
இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. ரியல் எஸ்டேட் நிறுவனமா என்று வியக்க வேண்டாம். இப்போது இந்தத் துறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்கு வரும்போது நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அந்த  வகையில்தான் இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட்.
நிறுவனம் எப்படி?
இது, மஹாராஷ்ட்ராவில் உள்ள புனேயில் ஒரு தலைசிறந்த நிறுவனமாகும். புனேயில் ரியல் எஸ்டேட் சந்தையில் கிட்டத்தட்ட 10% வரையிலான பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட 440 ஏக்கர் வரையிலான நிலத்தைத் தன்வசத்தே வைத்துள்ளது இந்த நிறுவனம்.
ஆரம்பகாலத்தில் வணிக வளாகம் மற்றும் வீடுகள் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், உலகப் பொருளாதாரத்தில் சுணக்கம் வந்தபின்னர் வணிக வளாகங்கள் தொழிலில் இருக்கும் ரிஸ்க்குகளை முழுமையாகப் புரிந்துகொண்டு படிப்படியாக வணிக வளாகக் கட்டுமானத்திலிருந்து விலகிவருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி,  இந்த நிறுவனத்தின் மொத்த கட்டுமான வியாபாரத்தில் குடியிருப்பு வீடுகளின் அளவீடு 90 சதவிகிதமாகவும், வணிக வளாகங்களின் அளவீடு 10 சதவிகித மாகவும் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது.
இந்த நிறுவனம் ஏறக்குறைய 50 சதவிகிதத்துக்கும் மேலான நிகர லாபத்தை (சிஏஜிஆர்) தந்துவந்துள்ளது. அதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து கட்டுமான நிறுவனங் களுமே லாபத்தை ஈட்ட முடியாமல் தவிக்கும் காலத்திலும் இந்த நிறுவனம் கணிசமான லாபத்தை ஈட்டியிருக்கிறது.  
இந்த நிறுவனத்துக்குத் தேவையான பணம் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளதா என்று பார்த்தால் இரண்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுடன் நல்லதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், தொடர்ந்து லாபம்பார்க்க வேண்டுமெனில், நல்ல பல புராஜெக்ட்களைத் தொடர்ந்து நிர்மாணம் செய்து விற்றாக வேண்டும். இந்தக் கோணத்தில் இந்த நிறுவனத்தின் திட்டங்களை அலசினாலும் நல்ல லாபம் தரக்கூடிய பல புதிய புராஜெக்ட்களைத் தொடர்ந்து நிர்மாணிக்கும் திட்டம் இதன்வசம் இருக்கவே செய்கிறது. எனவே, தொடர்ந்து லாபம் பார்க்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனலாம்.
ஏன் முதலீடு செய்யவேண்டும்?
இந்திய நகரங்களில் சுலபமாகத் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கிற ஒரு நகரம் புனேயாகும். வேகமான வளர்ச்சிகொண்ட புனேயில் கணிசமான பங்களிப்பைக்கொண்டு மக்களின் மனதில் ஒரு ஸ்திரமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது இந்த நிறுவனம்.  
தவிர, பெங்களூரிலும், மும்பை யிலும் சிறிய அளவிலான கட்டுமானப் பணியைச் செய்துவருகிறது. இதன் கையில் இருக்கும் நில வங்கியின் அளவும், தற்சமயம் இருக்கும் திட்டங்களும் தொடர்ந்து லாபத்தைத் தர வாய்ப்புள்ளதைப்போல் இருக்கிறது. 7 மில்லியன் சதுர அடி பரப்பளவை கட்டி விற்பனை செய்தும், ஏறக்குறைய 13 மில்லியன் சதுர அடி பரப்பளவுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. நிர்வாகத்தின் குணம் கட்டுமானத் தொழிலுக்கு மிகவும் ஏற்றாற்போலும், தரம் மிகுந்ததாகவும் இருக்கிறது. ஸ்திரமான லாபம், திட்டங்கள், நல்லதொரு லாப அளவு என எந்த அளவீட்டில் பார்த்தாலும் முதலீட்டுக்கு உகந்த நிறுவனமாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் கடனின் அளவும் பெரிய அளவில் பயப்படும்படியாகத் தற்சமயத்தில் இல்லை எனலாம்.
நிர்வாகம் எப்படி?
1991-ல் ஆரம்பிக்கப்பட்டுச் சமீபகாலம் வரை 42 புராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்த நிறுவனம். இதில் 30 புராஜெக்ட்கள் ரெஸிடென்ஷியல் வகையைச் சேர்ந்ததாகவும், 8 வணிக வளாகங்களும், 4 ஐ.டி பார்க்குகளும் அடங்கும். இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஒரு சிவில் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஏறக்குறைய 20 வருடங்களுக்கும் மேலான ரியல் எஸ்டேட் துறை அனுபவத்தைக் கொண்டவர். அதிக அளவிலான ரிஸ்க்குகள் எடுக்காமலும், ரியல் எஸ்டேட் துறைக்கே உண்டான பிரச்னைகள் பலவற்றையும் நன்கு அறிந்து செயல்படும் திறன் கொண்டவராகவும் இருப்பது சிறப்பு.
ரிஸ்க் ஏதும் உண்டா?
பெரும்பான்மையான புராஜெக்ட்கள் புனேயிலேயே இருப்பதால் எதிர்பாராதவிதமாகத் தொழில்ரீதியான தொய்வுகள் ஏதும் புனே நகரில் நடந்தால் இந்த நிறுவனத்தின் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். ரியல் எஸ்டேட் துறையில் கடுமையான போட்டியும் கட்டிமுடித்து விற்கப் படாத நிலையிலும், பாதிமுடிந்த நிலையிலும் பல புராஜெக்ட்கள் இருக்கின்றன. எனவே, விலை வீழ்ச்சி இந்த நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்கும்.  
கட்டுமானத் துறைக்குத் தேவையான சிமென்ட், கம்பி, மணல், செங்கல் போன்றவை விலை ஏற்றமடைந்தாலும் லாபம் பாதிக்கப்படலாம். இது ஒரு சிறிய நிறுவனம்தான். எனவே, பெரும் மாறுதல்கள்கொண்ட ஒரு துறையில் எவ்வளவு தூரம் தொடர்ந்து தாக்குபிடிக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறியே. ரிஸ்க்குகள் இருந்தபோதிலும், பழைய செயல்பாடுகளை மனதில்கொண்டு, மூன்று வருட கால அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொண்டால் தவறில்லை.
- நாணயம் ஸ்கேனர் 
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்!

நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை...
இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனியின் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்று ஏறக்குறைய எல்லோருடைய வீட்டின் சமையலறையிலும் இருக்க வாய்ப்புள்ள ஒரு கம்பெனிதான். அந்த கம்பெனியின் பெயர், டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்.  
தொழில் எப்படி?
வீட்டில் மிக முக்கியமான இடம் சமையலறை. சமையலறை சாதனங்கள் கட்டாயச் செலவாகக் கருதப்படுவதால் வியாபாரத்தின் அளவு என்பது தொடர்ந்து வளர்ச்சியைச் சந்திக்கவே வாய்ப்புள்ளது. இளைஞர்கள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில் புதிய குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் சமையலறை சாதனங்களுக்கான தேவையின் மொத்த வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப் புள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலும், அதிகரிக்கும் சம்பளங்களும் பல்வேறு புதுவிதமான சமையலறை உபகரணங்களின் தேவையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வளவு பாசிட்டிவான விஷயங் கள் இருந்தபோதிலும் சமையல் சாதனங்கள் துறையில் இருக்கும் ஒரு பெரிய சவால் என்பது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தயாரிப்புகள் அளிக்கும் போட்டியாகும். சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வரி மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லை.  விலை குறைவான பொருட்களும், சிறிய கடைகளிலும் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் விற்பனை உத்திகளைக் கொண்டிருப்பதும், இந்தத் துறையில் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.  
இருப்பினும் அதிகரிக்கும் சம்பளங் களும், உயரும் வாழ்க்கைத்தரமும் தரமான சமையலறை சாதனங்களை நோக்கி வாங்குவோரை நகர்த்துகின்றன. இந்தவகை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டுமெனில், நல்லதொரு பிராண்ட் மதிப்பும் நீண்டகால அனுபவமும் இந்தத் துறையில் தேவைப் படுகிறது.
கம்பெனி எப்படி?
பிரெஸ்டீஜ் என்ற பிரஷர் குக்கர் பிராண்டின் பெயரை சரிவர உபயோகித்து விரிவாக்கம் செய்து பல்வேறுவிதமான சமையலறை சாதனங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். பிரஷர் குக்கர் மற்றும் சமையல் உபகரணங்கள் பிரிவில் மிகவும் பழைமையான பிராண்டான பிரெஸ்டீஜ் தன்னுடைய சாதுரியமான திட்டமிடுதலால் இந்த இரண்டு செக்மென்ட்களையும் தாண்டி காஸ் ஸ்டவ்கள், இண்டக்ஷன் குக்கர்/ஸ்டவ், கிரைண்டர், மிக்ஸி, சமைத்த உணவைப் பாதுகாப்பாகவும், சுவை குறையாமலும் வைக்கத் தேவையான பாத்திரங்கள் போன்ற பல்வேறு சமையலறை சாதனங்களைத் தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கிறது.
வெறுமனே பிரஷர் குக்கர் விற்பனை மட்டுமே பெருமளவு லாபத்தைத் தந்துகொண்டிருந்த நிலையை மாற்றி தற்சமயம் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 50% மட்டுமே பிரஷர் குக்கர் மற்றும் சமையல் சாதனங்கள் பிரிவின் பங்களிப்பு உள்ளது. மீதமுள்ள விற்பனையில் காஸ் ஸ்டவ்கள் மற்றும் சமையலறையில் உதவும் மின்சாதனங்கள் பங்கெடுக்கிறது. தொழிலில் ஏற்படும் போட்டி மற்றும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை நன்குணர்ந்த இந்த நிறுவனம் அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.  
நிர்வாகம் எப்படி?
நீண்டகாலமாக இந்தத் துறையில் இருப்பதாலும், நிறையப் பல புதிய வெற்றிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதும், ஒரு பிரஷர் குக்கர் கம்பெனி என்ற அடையாளத் திலிருந்து ஒரு முழுமையான  கிச்சன் கம்பெனி என்று ஏறக்குறைய பத்தாண்டு காலத்துக்குள் தன்னை மாற்றிக்கொண்டதிலிருந்தே இந்த நிறுவனத்தின் நிர்வாக குணாதிசயத்தை நம்மால் கணிக்க முடியும்.
ரிஸ்க்குகள் என்னென்ன?
எனினும், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் போட்டியும், போலிகளின் தாக்கமும் இந்த நிறுவனத்துக்கு ஒரு சவாலாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தொடர்ந்து புதுப்புதுத் தயாரிப்புகளையும், ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளையும் செய்துவருகிறது இந்த நிறுவனம். போலிகளை எதிர்த்துப் போராடுவதில் இந்த நிறுவனம் செய்யும் பெரிய அளவிலான தனது தயாரிப்புகளும்,  விளம்பரங்களும், பிரெஸ்டீஜ் ஸ்மார்ட் கிச்சன் ஷோரூம்களும் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம்.
பொருளாதாரம் வளமையாக இருக்கும்போது சற்றே விலையுயர்ந்த தயாரிப்புகளையும், வளமை குறையும்போது சாதாரண தயாரிப்பு களையும் வாங்குவது என்பது வாடிக்கையாளர்களின் பாணி. இந்தப் பிரச்னையும் இந்த நிறுவனத்தின் விற்பனையை ஓரளவு பாதிக்கலாம். இந்த நிறுவனத்தின் கடந்தகால வளர்ச்சியைப் பார்த்தோமானால், ஒருவேகம் தெரியும். இந்த வேகமே சிலசமயம் சில பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடக்கூடும். அதேபோல் அகில இந்திய ரீதியாகச் செயல்பட்ட போதிலும் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ள பிராண்ட் இது. இதுவும் ஒருவகையிலான ரிஸ்க்தான்!
அரசாங்கம் சம்பந்தமான இடர்பாடுகள் பெரிய அளவில் இல்லாத தொழில் இது. விலை குறைந்த தயாரிப்புகள் தொடர்ந்து போட்டிபோட வாய்ப்பிருப்பதால் இதை ஒரு தொடர் ரிஸ்க்காகவே நாம் கருதவேண்டும். சந்தையினைப் பொறுத்தவரை, இந்த நிறுவனத்தின் பங்குகள் இதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளைவிட சற்று பிரீமியத்திலேயே விற்பனையாகிறது. எனவே, இதனையும் சற்று மனத்தில் நாம் கொள்ள வேண்டியுள்ளது.
எனினும், நீண்டகால அனுபவத்தையும், பிராண்டின் மதிப்பையும், இதுவரையிலான புதிய தயாரிப்புகளில் அடைந்த வெற்றியையும் மனத்தில்கொண்டால் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டுக்காக ஆய்வு செய்வதில் தவறேதும் இல்லை எனலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தப் பங்குகளின் விலை சற்றே பிரீமியத்தில் வியாபாரமாவதால் ஓர் அசாதாரண சூழலில் சந்தை வேகமாக இறங்கும்போது இந்தப் பங்குகளின் விலையும் இறங்கினால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் சிறிதளவு முதலீடு செய்யலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை.... 
இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி ஆட்டோமொபைல் துறையில் பெரும் பங்களிப்பைக் கொண்டிருக்கும் எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஆட்டோமொபைல் துறையே தள்ளாடுகிறதே! இந்தச் சூழ்நிலையில் ஆட்டோமொபைலில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா என்று யோசிப்பதில் என்ன லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கலாம்.
பொருளாதாரச் செயல்பாட்டில் சுணக்கம் வந்தபின்னர் எக்ஸைடு பேட்டரியின் விற்பனையும் லாபமும் நன்றாக குறைந்துகொண்டே வந்துள்ளது. இதையும் தவிர்த்துப் பொருளாதாரம் வேகமான ஓட்டத்தில் இருக்கும்போது எக்ஸைடு பேட்டரி போட்ட விரிவாக்கத் திட்டங்கள் எல்லாம் முடிவடைந்து, உற்பத்தி உபயோகத்துக்கு வரும்வேளையில் பொருளாதார வளர்ச்சி சுணக்கம் கண்டுவிட்டது. இதுவும் ஒருகுறையாகவே சந்தையில் பார்க்கப்பட்டு, அதற்குண்டான பலாபலன்கள் விலையில் தெரிய ஆரம்பித்துவிட்டது எனலாம். அதிலும் எக்ஸைடு பேட்டரி நிறுவனத்தின் விற்பனையில் பெரும்பங்களித்து வரும் ஆட்டோமொபைல் ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸரிங் நிறுவனங்களுக்கான சப்ளையில் சரியானதொரு சுணக்கம் ஏற்பட்டு அதனுடைய பாதிப்பு லாபத்தில் கணிசமான அளவு தொடர்ந்து தெரிகிறது.
தொழில் எப்படி?
வேகமாக வளரும் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் குணாதிசயத்தைக் கொண்டது ஆட்டோமொபைல் துறை. இந்தத் துறைக்கு உபகரணங்கள் சப்ளை செய்வது ஆட்டோ கம்ப்போனென்ட் துறை. தற்சமயம் வெகுவான சுணக்கம் இருக்கிறபோதும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னால் நிலைமை சரியாகும்பட்சத்தில் மீண்டும் ஒரு கணிசமான முன்னேற்றத்தை இந்தத் துறை காணும் வாய்ப்புள்ளது.
ஆட்டோமொபைல் துறையிலும் பேட்டரி தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதால், பொதுவான சுணக்கநிலை பொருளாதாரத்தில் ஏற்படும்போது மற்றத் தொழில்களுக்கு விற்கப்படும் பேட்டரிகளின் எண்ணிக்கையும்கூடக் கணிசமான அளவில் குறைந்துவிட்டது. இதுபோன்ற பொருளாதாரத்தின் சுழற்சியைச் சார்ந்த லாபம் கொண்ட தொழிலில், நிலைமை நன்றாக இருக்கும்போது கணிசமான லாபமும், நிலைமை மோசமாக இருக்கும்போது லாபக்குறைவும் ஏற்படுவது சகஜமே!  
அதேபோல், பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது ஏகப்பட்ட டிமாண்ட் உருவாவதால் மூலப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிடும். இதுபோன்ற மூலப்பொருட்களின் விலையேற்றம் பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது கொஞ்சம் லாபத்தைப் பதம் பார்த்துவிடும். அதேசமயம், தற்போது இருப்பதுபோன்ற பொருளாதார மந்தநிலையில் பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களாகிய காரியம் விலை குறைவதால் அதனால் இந்தத் தொழில் பலன்பெற வாய்ப்புண்டு. இருப்பினும் பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் காரீயத்தின் விலையும் தாறுமாறாக, முன்னுக்குப்பின் முரணாக ஏற்ற இறக்கத்தைச் சந்திப்பதால் இதையே இந்தத் தொழிலுக்கான ரிஸ்க் என்றுகூடச் சொல்லலாம்.
ஆட்டோமொபைல் பேட்டரி தவிர்த்து, மின்சாரத் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் காலத்தில் இன்வர்ட்டர் பேட்டரி வியாபாரம் நன்றாகப்போக வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்சமயம் மின் தட்டுப்பாடு சற்று குறைந்திருப்பதாலும், நீண்டகால அடிப்படையில் மின் தட்டுப்பாடு படிப்படியாகக் குறைய வாய்ப்பிருப்பதாலும் இந்தவகை பேட்டரி விற்பனை இந்தத் தொழிலில் பெரிய அளவில் லாபத்தில் பங்களிக்க வாய்ப்பில்லை எனலாம்.
  கம்பெனி எப்படி?
ஆட்டோமொபைல் பேட்டரி தொழிலில் மிகவும் பலமான சந்தைப் பங்களிப்புடன் இருக்கிறது இந்த நிறுவனம். ஏனென்றால், ஓஇஎம் பிரிவில் ஏறக்குறைய 65 சதவிகித சந்தைப் பங்களிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் பேட்டரிகள் அதிகபட்சமாக மூன்று முதல் நான்கு வருட காலங்களே உழைக்கும். எனவே, தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தப் பழைய பேட்டரி மாற்றுவதற்காகச் செய்யப்படும் விற்பனையில் ஏறக்குறைய 35% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
சில ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி இருந்துவந்த போதும் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கும் திருப்பமும், அதிகரித்துவரும் சாலைக் கட்டுமானங்களும் வாகனங்களுக்கான தேவைகளை அதிகரிக்கவே செய்யும். இதனால் பேட்டரிகளின் தேவையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் இந்த நிறுவனம் போன்ற கணிசமான சந்தைப் பங்களிப்பைக்கொண்ட நிறுவனங்கள் பலனடையவே செய்யும் எனலாம்.
பொருளாதாரச் சுணக்கம் நிலவும் சூழலிலும்கூட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களைப் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தி விற்பனையை உயர்த்த பாடுபட்டு வருகின்றன. இந்தப் புதிய மாடல் அறிமுகங்களினாலும் இந்த நிறுவனம் பலனடையவே செய்யும். ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல் பேட்டரிகளில் காரீயம் (லெட்) என்னும் உலோகமே பெரும்பங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகத்தின் விலையோ உலகச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான காரீயம் இறக்குமதி செய்யப்படுவதால் உலோகத்தின் விலை உயர்வையும், டாலரின் மதிப்பையும் கணக்கில்கொண்டே செயல்பட வேண்டியுள்ளது. இந்த இரு  விஷயங்களையும் மனதில்கொண்டு மறுசுழற்சி செய்த காரீயத்தைத் தனது பேட்டரிகளில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது இந்த நிறுவனம்.  இதற்குத் தேவையான ஸ்மெல்டர்ஸ்களையும் வாங்கிப் போட்டுள்ளது இந்த நிறுவனம்.
  நிர்வாகம் எப்படி?
பேட்டரி உற்பத்தி மற்றும் விற்பனையில் நல்லதொரு அனுபவமும், நேர்த்தியான கடன் இல்லாத பேலன்ஷீட்டையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் நிர்வாகம் திறமை வாய்ந்தது என்றே சொல்லலாம். டிவிடெண்ட் கொடுப்பதிலாகட்டும், லாபம் ஈட்டுவதிலாகட்டும் இந்த நிறுவனத்தின் நிர்வாகத் திறமை சிறந்ததாகவே இன்றைய தினத்தில் தென்படுகிறது. இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள்  ஷேரை அடகுவைத்து கடன் வாங்கவில்லை என்பது நல்ல விஷயமே!  
என்ன ரிஸ்க்?
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்பு முழுமையாக இந்த நிறுவனத்தின் லாபத்திலும் செயல்பாட்டிலும் இருக்கவே செய்யும். போட்டி என்பது பேட்டரி தொழிலில் மிகவும் கடுமையாக இருக்கிறது. சிறிய பல உள்ளூர் பிராண்டுகள் விலைகுறைவான பேட்டரிகளைத் தயாரித்து விற்பதன் மூலமும் வேகமாக வளர்ந்துவரும் அமரராஜா பேட்டரி போன்ற நிறுவனங்களும் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து போட்டியைத் தந்துகொண்டிருக்கும். விற்பனையிலும் லாப அளவிலும் இதுவரை கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் கடுமையான போட்டியை சந்திக்க நேரலாம்.
ஏன் முதலீடு செய்யவேண்டும்?
போட்டிகள் நிறைந்த பொருளாதாரத்தின் ஓட்டத்துக்கேற்ப வேகமாக மாறுகிற தொழில் இது. தற்போதைய சூழ்நிலையோ பொருளாதார மந்தநிலையின் உச்சத்தில் இருக்கிறது. கடந்த காலத்தின் நடப்புகளைவைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய சந்தைப் பங்களிப்பைக்கொண்ட நிறுவனமான இதன் பங்குகளை ஓர் அசாதாரண விலை இறக்கத்தின்போது வாங்கிப்போட்டால் பொருளாதாரம் மீண்டும் மேல்நோக்கிப் போக ஆரம்பிக்கும்போது கணிசமானதொரு லாபத்தை இந்தப் பங்குகள் தர வாய்ப்புள்ளது என்பதாலேயே இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்கள் ஒரு கண்வைத்து செயல்படலாம்.
- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)